திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.72 திருமாகறல் - திருவிராகம் பண் - சாதாரி |
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே.
|
1 |
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
யேத்தவினை யகலுமிகவே.
|
2 |
காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
யேத்தவினை பறையுமுடனே.
|
3 |
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன
லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
பாடுநுக லாவெழுமினே.
|
4 |
துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட
மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி
யாரைநலி யாவினைகளே.
|
5 |
மன்னுமறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை
யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர்
வானுலகம் ஏறலெளிதே.
|
6 |
வெய்யவினை நெறிகள்செல வந்தணையும்
மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி
மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை
யாவினைகள் அகலுமிகவே.
|
7 |
தூசுதகில் நீள்கொடிகள் மேகமொடு
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை
நிற்றலில் போகுமுடனே.
|
8 |
தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு
நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன்
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை
யாயினவும் அகல்வதெளிதே.
|
9 |
காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி
யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
யாரையடை யாவினைகளே.
|
10 |
கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ்
வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
கூடுசம் பந்தன்உரையான்
மடைகொன்புன லோடுவயல் கூடபொழில்
மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
தொல்வினைகள் ஒல்குமுடனே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |